டாலர் தேசம்

வந்தேறிகளின் தேசமான அமெரிக்காவிற்கு (USA) வந்தமர்ந்து பத்து வருடத்திற்கு மேலாகிறது ஆனால் இதுவரை இந்நாட்டைப்பற்றிய வரலாற்றை விரிவாக தெரிந்து கொண்டது இல்லை. சுற்றுலாவாசியாக வந்த என் அம்மா செவ்விந்தியர்களைப் பற்றி ஆர்வத்துடன் கேட்டாள். என் அப்பாவோ விர்ஜினியா புகையிலைப் பற்றியும் பாஸ்டன் தேநீர் விருந்தைப்பற்றியும் தான் அறிந்ததை பகிர்ந்து கொண்டார் ஆனால் இங்கு வந்திறங்கிய புதிதில் எனக்கு இது எதைப்பற்றியும் தெரிந்திருக்கவில்லை (என் வரலாற்றறிவு அப்பிடி!!!).

அடுத்தடுத்து வந்த வருடங்களில் திரைப்படங்கள், டாக்குமெண்டரிகள் மூலமும் ஏதாவது சர்ச்சையான செய்திகள் வெளிவரும் பட்சத்தில் அதில் உள்ள வரலாற்று பின் புலத்தை கூகுள் செய்தும், எனது கணவரிடம் கேட்டும்  சிறிது சிறிதாக அறிந்து கொள்ளத் துவங்கினேன். வரலாற்றில் இடம் பிடித்த முக்கிய புள்ளிகளையும் சரித்திர நாயகர்களைப் பற்றியும் என் குழந்தைகள் படிக்கும் நூலக புத்தகங்கள் வாயிலாகவும் தெரிந்து கொள்ள வாய்ப்பு அமைந்தது.

மிக சமீபத்தில் நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் பா. ராகவன் எழுதிய "டாலர் தேசம் - அமெரிக்காவின் அரசியல் வரலாறு" என்னும் புத்தகத்தை படித்து முடித்தேன். குமுதம் ரிப்போர்ட்டரில் தொடராக வெளிவந்து பின் 2004 ஆண்டில் புத்தக வடிவம் பெற்றுள்ளது. அமேசான் kindle-ல் $4 (Rs.80/-) சொச்சத்திற்கு கிடைக்கிறது.

கொலம்பஸ் எதிர்பாரா விதமாக  அமெரிக்காவைக்  கண்டதைந்திலிருந்து ஆரம்பிக்கும் புத்தகம் விறு விறு  வென்று ஐரோப்பியர்களின் வருகை, ஜேம்ஸ் டவுனில் காலனி அமைத்தலுக்குத் தாவி விரைவில் பிரிட்டனை எதிர்க்கும் சுதந்திர போராட்டத்திற்குச்  சென்று விடுகிறது. அங்கு தான் நமக்கு அறிமுகமாகிறார் பின்பு தேசத் தந்தையாக அறியப்படவிருக்கும் ஜார்ஜ் வாஷிங்டன். அவரின் பின்புலம் முன்னுக்கு வந்த விதம் என்று மிக விரிவாக விவரிக்கிறார். அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக தேசம் அவரை அறிவித்திருந்தாலும் வரிசைப்படி அவர் எட்டாவது அதிபர்தான் என்று வியக்கவைக்கிறார் ஆசிரியர்.

அவருக்கு அடுத்தடுத்து வந்த அதிபர்களையும் அவர்களின் திருவிளையாடல்களையும் கூறிக்கொண்டே வரும் ஆசிரியர் வெகு விரைவாகவே நாம் அனைவரும் அறிந்த "Civil War" பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்றாலும் அதை தற்காலிகமாக "Pause" செய்து விட்டு அமெரிக்க மண்ணின் மைந்தர்கள் மற்றும் பூர்வகுடியினரான செவ்விந்தியர்களைப் பற்றி விவரிக்கிறார். 

அடிமைகள் வைத்துக் கொள்ளும் இழிவினை நிறுத்துவேன் என்று உறுதி கூறி அதிபர் பதவிக்கு வரும் உலகப் புகழ் வாய்ந்த ஆபிரகாம் லிங்கன் நம் பார்வைக்கு அடுத்து  வருகிறார். தனது 50 வயது வரை தோல்வியை மட்டுமே பார்த்தவர் என்றால் நம்ப முடிகிறதா என்ன?

தெற்கு கரோலினாவில் சம்டர் கோட்டை தாக்குதல் தான் உள்நாட்டு யுத்தத்தின் பிள்ளையார் சுழி என்ற தகவலைத் தந்து விட்டு கறுப்பின மக்களின் நிலை எவ்வாறு இருந்து வந்துள்ளது என்றும் அடிமைகளாக அவர்கள் பட்ட அவதிகளையும் விவரிக்கிறார். முதல் முதலாக Slavery-யை ஒழிக்க வேண்டும் என குரல் கொடுத்தவர் William Garrison என்னும் வெள்ளையர் தான். 21 வருடங்கள் கழித்து அவருக்கு ஆதரவுக் குரல் Fredrick Douglas என்னும் அடிமையிடமிருந்து வந்திருக்கிறது. இவர்களின் இயக்கம் "abolitionist" என்று அறியப்பட்டது என்று விவரிக்கிறார். அதன் பிறகு நாம் அனைவரும் அறிந்த "Under ground railroad" மற்றும் "Harriet Tubman" போன்ற பிரபலங்களைப் பற்றியும் விலாவரியாக விளக்குகிறார்.

உள்நாட்டு யுத்தம் முடிகிறது லிங்கன் கொலை செய்யப் படுகிறார். அதற்கு அடுத்து அமெரிக்க மக்களின் கடும் உழைப்பு, அதன் பிரம்மாண்டமான இருப்புப் பாதை, எளிமையான குடியேற்ற முறை மற்றும் உலகமயமாக்கம்  எவ்வாறு அந்நாட்டை யுத்த அழிவிலிருந்து மீட்டெடுத்து வல்லரசுப் பாதையில் கொண்டு செல்கிறது  என்று நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.

நடுநடுவே அக்காலகட்டங்களில் நிகழும் ஆட்சி மாற்றங்களையும் அதிபர்களின் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான தகவல்களையும் புத்தகம் முழுமைக்கும் அங்கங்கே தூவிக்கொண்டே செல்கிறார் உதாரணமாக தியோடர் ரூஸவெல்ட்ம் உட்ரோ வில்சனும் அமைதிக்காக நோபல் பரிசைப் பெற்றவர்கள் என்று கோடிட்டு காட்டுகிறார். அதிபர் ஆவதற்கு முன்பே கென்னெடி அவர் எழுதிய Profile in Courage புத்தகத்திற்காக Pulitzer பரிசு பெற்றவராம்!!!

பெரும்பாலான அதிபர்கள் இராணுவத்தில் பணியாற்றியவர்களாக இருந்தாலும் சிலர் கல்லூரி பேராசியராகவும், Tailor ஆக வாழ்கையைத் தொடங்கியவர்களாகவும் (Andrew Jackson) நடிகராகவும் (Ronald Reagan) இருந்திருக்கிறார்கள். 

James Hoban என்னும் ஐரிஷ் நாட்டு கட்டட கலை நிபுணரின் டிசைன் தான் அதிபரின் குடியிருப்பான வெள்ளை மாளிகை 

அமெரிக்க அரசியலின் வாயிலாக வரலாற்றை விவரித்திருந்தாலும் அந்நாட்டை மையமாக வைத்து 360 டிகிரி சுற்றி வந்து உலக வரலாற்றையும் சுருக்கமாக கூறியிருக்கும் விதம் அருமை. அமெரிக்காவின் அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியையும் பொருளாதார முன்னேற்றத்தையும் அதன் மூலம் உலக நாடுகளிடையே அதன் மதிப்பு உருமாற்றம் அடைவதும் என்று இப்புத்தகத்தை படிக்கும் போது ஒரு virtual tour அடித்த திருப்தி கிடைக்கிறது.

அடுத்ததாக அமெரிக்காவின் பெருமையை உலகம் அறிந்த முதல் உலகப்போர் வருகிறது. நேரம் எடுத்துக் கொண்டு பொறுமையாக விவரிக்கிறார் ஆசிரியர். போர் முடிந்த கையேடு அதிபர் Udro Wilson சர்வதேச சங்கத்தை தோற்றுவிப்பதில் பெரும் பங்காற்றுகிறார்.

அமெரிக்காவிற்கு எப்போதுமே ஒரு ராசி இருந்து வந்துள்ளது அது என்னெவெனில் மிகத் திறமையான அதிபர் ஒருவர் இருந்து விட்டு போனார் என்றால் அதற்கு அடுத்து வருபவர் அவருக்கு நேரெதிராக இருப்பார் என்பது. புத்தகம் முழுக்கவே இதற்கு பல உதாரணங்களை ஆசிரியர் ஆதாரத்தோடு தருகிறார். நாம் கேட்டே இராத அதிபர்களின் சாதனைகளையும் அவர்கள் போட்ட தகிடுதத்தங்களையும் படிப்பதற்கு மிக சுவாரசியமாகவும் நகைச்சுவையுமாகவும் இருந்தது.

இவ்வாறு  விக்ரமன் படத்தில் ஒரே பாட்டில் முன்னுக்கு வரும் கதாநாயகனைப் போல அமெரிக்கா வளர்ந்து கொண்டிருந்த சமயத்தில் வருகிறது "Great Depression" இதை ஆசிரியர் "அமெரிக்கா சந்தித்த சவால்களிலேயே கேலன் கேலனாக ரத்தமும் கண்ணீரும் கலந்திருந்தது" என்று குறிப்பிட்டு அதிலிருந்து எவ்வாறு அவர்கள் வெளிவருகிறார்கள் என்றும்  கூறுகிறார். அதே காலகட்டத்தில் கடும் பஞ்சமும் மணல் புயலும் சேர்ந்து அமெரிக்காவை ஒரு வழி செய்திருக்கிறது.

இதிலிருந்து வெளிவந்த சில வருடங்களிலேயே இரண்டாம் உலகப்போர் எட்டிப் பார்க்கிறது. ஹிட்லரைப் பற்றியும் அவரின் கொடுங்கோலாட்சியைப் பற்றியும்  ஏன் எந்நாடும் கண்டு கொள்ளவில்லை என்பதையும்  அடுத்தடுத்த அத்தியாயங்களில் சற்றும் சுவாரசியம் குன்றாமல் எடுத்துக் கூறுகிறார். அதற்கு பின் நடந்த ரஷ்யாவுடனான பனிப்போர், ஜப்பான் மீதான குண்டு வீச்சு, கியூபா யுத்தம், வியட்னாம் யுத்த நிகழ்வுகளும்  நாம் ஓரளவிற்கு அறிந்ததே எனினும் நாம் பரவலாக அறியாத பல்வேறு தகவல்களையும் அன்றைய சமூக சூழல்களையும் நம் பார்வைக்கு கொண்டு வருகிறார். போகிற போக்கில்  ட்ரூமன், ஐசோனோவர் போன்ற அதிபர்களின் கெட்டிக்காரத்தனத்தையும் புட்டு புட்டு வைக்கிறார்.

அவ்வப்போது Reverse Gear அடித்து முந்தைய அத்தியாயங்களில் கூறிய விவரங்களை  recap போல தந்து நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்வது நமது ஆர்வத்தை அதிகரிக்கிறது எனலாம்.  

அடுத்து என்ன வளைகுடா யுத்தம் தானே? என்று நாம் போரில் மூழ்கி இருக்கும் போது நம்மை தட்டி எழுப்பும் விதமாக " வெண்மையின் நிறம் கருப்பு" என்ற அத்தியாயத்தை பார்த்தவுடனே அடடே மார்ட்டின் லூதர் கிங்கை மறந்துவிட்டோமே என்று நமக்குத் தோன்றுகிறது. சமீபத்தில் மரணமடைந்த லிண்டா பிரவுன், புகழ் பெற்ற Montgomery Bridge, Rosa Parks-ன் பஸ்  புரட்சி பற்றியும் நமக்கு நினைவு படுத்துகிறார்.

அடுத்ததாக விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் சாதனைகளை விவரிக்கிறார். வியட்னாம் யுத்தம் முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் வேளையில் "நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்காதே...நாட்டுக்காக நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக் கொள் "என்ற பிரசித்தி பெற்ற வாசகத்தை கூறிய மிக இள வயதில் அதிபராகி மிக இள வயதில் மரணத்தை தழுவிய அமெரிக்காவின் முதல் கத்தோலிக்க அதிபர் கென்னடி வருகிறார்.

வியட்னாம் யுத்தத்தின் ஹீரோ Nguyen Tat Thanh  எவ்வாறு "ஹோசிமின்" ஆனார் என்பது பற்றிய விவரங்கள் நாம் அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. 

அதற்குப் பின் கியூபா யுத்தமும் அதன் ஹீரோ பிடல் காஸ்ட்ரோவும் வருகிறார்கள் இந்நேரத்தில் எல்லாம் அமெரிக்கா நாட்டாமையாக பதவி உயர்வு பெற்று விட்டது அதனால் பல்வேறு அரசியல் போரில் அது ஈடுபட வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறது. நிக்சன் அதிபராகிறார் அமெரிக்கா நிலவில் காலடி எடுத்து வைக்கிறது.

பின்வரும் அத்தியாங்களில் பட்டாணி உற்பத்தியில் அறிவியல்  சாதனை செய்த ஜிம்மி கார்ட்டர் அதிபராகிறார். வளைகுடா யுத்தம் ஆரம்பம் ஆகிறது. "தான் வளர்த்த கடா தன் மார்பிலேயே பாயும்" என்பது போல ஒசாமா பின் லேடன் தலைமையில் எவ்வாறு பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் (ரீகனின்) அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியது என்று கதை கதையாக எழுதியிருக்கிறார்.

அடுத்து வந்த கால கட்டங்களில் அமெரிக்காவின் அதிபர்கள் மாறுகிறார்களே தவிர தீவிரவாதத்தை ஒடுக்க முடியவில்லை. நாம் அனைவரும் அறிந்த 9/11 தாக்குதலுக்கு முன்பே  பிப்ரவரி 26, 1993 அன்றே உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டிருக்கிறது ஆனால் ஆப்கான் யுத்தம் தொடங்கியது 2001-ல். ஒசாமாவை பிடிக்க முடியவில்லை. தன்னுடைய பதவிக்காலத்தை  இராக் யுத்ததோடு (சதாம் ஹுசைன்) முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்  புஷ். அதன் முடிவு என்ன ஆனது என்பதோடு புத்தகத்தை நிறைவு செய்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆய்வு செய்து பா.ராகவன் எழுதிய இப்புத்தகம் சரித்திரத்தை சற்றும் தொய்வில்லாமல் நம்மை ஆர்வமிழகச் செய்யாமல் முன் கொண்டு செல்கிறது. வழக்காடு மொழியில் இருக்கும் அவரின் எழுத்து யாரோ நமக்கு பார்த்திபன் பாணியில்  கதை சொல்வதைப் போன்ற உணர்வைத் தருகிறது.  எளிமையான நடையில் எழுதப்பட்டிருக்கும் இப்புத்தகம் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. வரலாறு அறியாத என்னைப் போன்ற பிரகஸ்பதியாக இருப்பீர்களானால் கூடுதலாக ரசிப்பீர்கள்.

அரசியல் நாட்டம் இல்லாதவர்கள் கூட கடந்த நான்கு ஆண்டுகளாக அமெரிக்காவின் அரசியலை கூர்ந்து  கவனித்து வருகிறார்கள் என்பது உண்மையே. அவர்களில் நீங்களும் ஒருவரா? அப்போ தைரியமா இந்த புத்தகத்தை நீங்கள் படிக்கலாம். 

பின் குறிப்பு : இப்புத்தகத்தை படிக்கும் போது பல்வேறு தமிழ் சினிமா வசனங்கள் என் நினைவில் வந்து சென்றாலும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா" என்பது எத்தனை உண்மை என்பது தெளிவாகப் புலப்பட்டது. (ஆசிரியரும் தன் முடிவுரையில் இதனையே குறிப்பிடுகிறார்) 



'

Comments

  1. Excellent writing as usual. You summarized the entire book very well. I suggest you send this to the writer Mr Raghavan.

    ReplyDelete
  2. Interesting review. makes you read the book. good one!

    ReplyDelete
  3. Great book..Very interesting to read in layman terms..I didn't know that US initiated war with these many countries for it own economic growth until I read this book..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - Montreal #roadtrip #travel_blog