நிலமெல்லாம் ரத்தம்- புத்தக விமர்சனம் - பகுதி -7

 இப்படியே இவ்விரு நாடுகளும் ஏட்டிக்கு போட்டியாக என்னென்ன செய்தன என்பதையும் அதில் பாலஸ்தீன அப்பாவி மக்கள் "இண்டிஃபதா" என்ற பெயரில் எப்படி ஈடுபட்டார்கள், பாடுபட்டார்கள்  என்பதையும் மிக மிக விளக்கமாகவே  கூறுகிறார். இப்படியே இருந்தால் எப்படி என்று நார்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் 1993-ல்  நடந்த அமைதி ஒப்பந்த  நடவடிக்கையை ஆதரித்த அராஃபத் மேல்  மக்கள் கோபம் கொள்கிறார்கள்!!!

இப்பொது நாம் அனைவருக்கும் பரிச்சயமான  சதாம் ஹுஸைனும் (குவைத் யுத்தம்) கதைக்குள் வருகிறார் இங்கு நாம் புரிந்து கொள்வதற்கு வசதியாக இலங்கை விடுதலைப் புலிகளின் போராட்டங்களை  ஒப்பிட்டு அலசுகிறார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடம் பிடிப்பதில் மட்டும் பிரச்னை இல்லை அல் அக்ஸா மசூதியை இடித்து விட்டு Synagogue கட்டுவது, ஒரே புனிதத்தலம் என்று மத ரீதியிலான பிரச்னை வேறு!!! இரு நாடுகளுமே ஆயுத தாக்குதலைதான் செய்தது. பாலஸ்தீனம் செய்தது தீவிரவாதம்..இஸ்ரேல் செய்தது போர் எனப்பட்டது!!!

1979-ற்கு அடுத்ததாக அமெரிக்கா 2001-ல்  அமைதி நடவடிக்கைக்கான "Road Map" வரைந்து கொடுத்து "இனிமேயாச்சும் போயி பிள்ளைங்களை படிக்க வைங்கப்பா" என்று அனுப்பியது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஏற்பாட்டை ஆசிரியர் நேரம் எடுத்துக் கொண்டு விளக்கியிருக்கிறார். இது ஓரளவிற்கு உருப்படியான பிளான் என்று குறிப்பிடும் ஆசிரியர் பாலஸ்தீனுக்கும் ஏற்றது என்கிறார்.

அடுத்தது யாசிர் அராஃபத் எவ்வாரெல்லாம் இஸ்ரேல் ராணுவத்தினரால் பதவி இறக்கப்பட்டு  அலைக்கழிக்கப்பட்டார்.. அவர் வாழ்கை எப்படி முடிந்தது என்று நமக்குத் தெரியப்படுத்தும் ஆசிரியர் நிரந்தரமான அமைதிக்கு ஒரு கல்லைக் கூட யாரும் நகர்த்தவில்லை என்கிறார்.

2005-ம் ஆண்டு வெளி வந்திருக்கும் இந்த புத்தகத்தின் முடிவில் ஆசிரியர் அடுத்த பத்து ஆண்டுக்குள் எப்படியும் இவ்விருதேசங்களின் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கையோடு முடித்திருக்கிறார் ஆனால் நடப்பது என்ன என்பது நமக்குத்தான் தெரியுமே?

இப்புத்தகத்தை வாசித்த பின்  நம்முள் தோன்றும் எண்ணங்கள் முந்தைய எண்ணங்களை விட மிகவும் வேறுபட்டவையாகவே இருக்கின்றன. தங்களுடைய சொந்த தேசத்தை விட்டு அகதிகளாக அலைந்து திரிந்த யூதர்கள் தங்களுடைய அடையாளங்களை மிக பத்திரமாக பாதுகாத்து பல்வேறு கஷ்டங்களைக் கடந்து தங்களின் கனவு தேசமான இஸ்ரேலை கண்டடைந்திருக்கின்றனர். அதற்கு தங்களின் விவேகத்தையும், அரசியல் தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் கையாண்டது உண்மைதான் எனினும் தங்கள் திறமைகளையும் வளர்த்துக் கொண்டதே அவர்களின் வெற்றிக்குக் காரணம் என்று எண்ணத் தோன்றுகிறது. பல்வேறு தேசங்களில் Immigrants ஆக வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் இவர்களிடம் இருந்து சொந்த அடையாளங்களை விட்டுக் கொடுக்காமல்  எவ்வாறு கட்டிக் காப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்!!!

மறுபுறம் தீவிரவாதம் என்றாலே இஸ்லாமியர்களை சுட்டுவது தவறு. தங்களின் மறுமலர்ச்சிக்காக ஆயுதம் ஏந்தியவர்கள் தான் இந்த அரேபியர்கள்.தங்களைச் சுற்றி உள்ள அனைத்தும் மாறும் போது கல்வி அறிவு, தொழில்நுட்பம் என்று தங்களை Update செய்து கொள்ளாமல் மத ரீதியான சகோதரத்துவதில் நம்பிக்கை வைத்தது சரியான முடிவுதானா? என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது.

பாலஸ்தீன மக்கள் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தில் தீவிரவாதம் இல்லாமல் வாழட்டும்..எங்கள் ராணுவம் அங்கு தான் இருக்கும் என்று அடம் செய்யும் இஸ்ரேல்.

எங்களிடம் போர் என்ற பெயரில்  ஏமாற்றி நீங்கள் ஆக்கிரமித்த இடங்களையெல்லாம் திரும்பத் தாருங்கள், அதுவரை எங்கள் தாக்குதல் தொடரும் என்று சொல்லும் பாலஸ்தீனம்..என்று தீரும் இவர்கள் பிரச்னை??? 

உங்களுக்கு ஆர்வமிருந்து நேரம் கிடைத்தால் அவசியம் இந்த புத்தகத்தை வாசித்துப் பாருங்கள்..குழந்தைகளிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இவ்விரு தேசங்களின் வரலாறு, புவியியல் மற்றும் மத வேறுபாடுகளை உள்ளடக்கிய தகவல்களின் களஞ்சியம் தான் இந்த "நிலமெல்லாம் ரத்தம்" புத்தகம்.

முற்றும்.

Comments

Popular posts from this blog

Charlotte 2 Canada - By Car - The Capitol State #roadtrip #travel_blog

Soubin Shahir - யார் இந்த கதா(தை) நாயகன்?!

Charlotte 2 Canada - By Car - Montreal #roadtrip #travel_blog